நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (07) மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியில் நேற்றிரவு ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, இன்றைய தினத்திலும் மின்சாரம் இடைக்கிடை தடைப்படும் என மின்சார சபையின் பொதுமுகாமையாளர் R.M.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த கோளாறு காரணமாக 135 மெகா வோர்ட் மின்சாரம், தேசிய கட்டமைப்பிக்கு இல்லாது போயுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், குகுலே கங்கை மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட கோளாறு காரணமாக, தேசிய மின் கட்டமைப்புக்கு 76 மெகா வோர்ட் மின்சாரம் இல்லாது போயுள்ளது.
இதனால், கோட்டே, மஹரகம மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு மின் தடை ஏற்பட்டுள்ளது.
குகுலே கங்கை மின் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையம் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை என அவர் கூறுகின்றார்.
இதனால், இன்றைய தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைக்கிடை மின்சார விநியோகம் தடைப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார். (TrueCeylon)