கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்த சில சம்பவங்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன.
கடந்த சில தினங்களில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, அவர்களது குடும்பத்தார் பொறுப்பேற்கவில்லை என தெரியவருகின்றது.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை பலவந்தமாக தகனம் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராகவே, உயிரிழந்த தமது உறவினர்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கு சவப்பெட்டிகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால்; பணம் கோரப்பட்ட போதிலும், உறவினர்கள் பணத்தை வழங்க மறுத்துள்ளனர்.
மாளிகாவத்தை பகுதியில் உயிரிழந்த நோயாளர் ஒருவர் தொடர்பிலும், கொழும்பு – 02 பகுதியில் உயிரிழந்த இரண்டு நோயாளர்கள் தொடர்பிலும் அவர்களது உறவினர்களுக்கு சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இறுதிக் கிரியைகளை நடத்துவதற்காக சுகாதார பிரிவினர், உறவினர்களிடம் பணத்தையும் இதன்போது கோரியுள்ளனர்.
அரசாங்கம் பலவந்தமாக செயற்படுகின்றமையினால், தமக்கு பணம் வழங்க முடியாது எனவும், உயிரிழந்தோரின் சாம்பல் தமக்கு தேவையில்லை எனவும் அவர்கள் அதிகாரிகளிடம் கூறிய நிலையில், வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதிகாரிகள் பலவந்தமாக ஆவணங்களில் கையெழுத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும், தாம் அதனை நிராகரித்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது மார்க்கத்தின் பிரகாரம், உயிரிழப்போரின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமே தவிர, தகனம் செய்யப்படக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை எட்டியதாக அவர்கள் கூறுகின்றனர்.