இரண்டாம் இணைப்பு
கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடுவதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய நிலைமையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியூடாக கொழும்பு − கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு − கண்டி வீதி திறக்கப்படுமா? − மண்சரிவு அபாயத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறும் கோரிக்கை
கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை மீண்டும் திறப்பது குறித்து இன்று முற்பகல் தீர்மானிக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவிக்கின்றார்.
இன்றைய வானிலை மற்றும் வீதியின் நிலைமை குறித்து ஆராய்ந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அவர் கூறினார்.
கண்டி − கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் காணப்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வீதியை மீள திறப்பதா? இல்லை? என்பது குறித்து இன்று நடத்தப்படும் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.
இதேவேளை, பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கொழும்பு − கண்டி தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தினால், பஸ் மார்க்கத்தை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதை அடுத்தே, பஸ் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
எனினும், பஸ் உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது. (TrueCeylon)