மக்களுக்கு சேவையாற்ற தமது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் ராணி எலிசபெத் என, இங்கிலாந்து மன்னராக இன்று பதவியேற்க உள்ள சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளாக ராணியாக இருந்த எலிசபெத் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய மன்னராக சார்ள்ஸ் இன்று பதவியேற்கிறார்.
லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய அக்சசன் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 700 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடையே, மூன்றாம் சார்ள்ஸ், மன்னராகப் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டதும், அவர் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொள்வார்.
இதனிடையே, ராணியைக் காண ஸ்கொட்லாந்து சென்றிருந்த சார்ள்ஸ், அவரது மனைவி கமிலாவுடன் லண்டன் வந்து சேர்ந்தார். நாட்டு மக்களுக்கு அவர் நிகழ்த்திய கன்னி உரையில், மக்களுக்கு சேவையாற்ற தமது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் ராணி எலிசபெத் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதங்களைக் கடந்து சேவையாற்றப் போவதாகவும், அரசியல் கோட்பாடுகளின் வழியில் தொடர்ந்து நடப்பதாகவும் தமது உரையில் சார்ள்ஸ் உறுதி அளித்தார்.
சார்ள்ஸின் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டமும், மகன் வில்லியம்ஸ்க்கு இளவரசர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.