கொழும்பில் இன்று மாலை முதல் தொடர் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.
கடும் மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில், தொடர்ச்சியாக இடி, மின்னலுடனான வானிலையும் காணப்பட்டது.
என்றுமே இல்லாதவாறு தொடர் மின்னல் காணப்பட்டமை, கொழும்பு வாழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பிராந்தியத்தில் காற்றின் ஒரு சுழற்சி செயற்பாடு (CYCLONIC CIRCULATION) காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதியில் எதிர்வரும் 23ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்க வலயம் (LOW PRESSURE AREA) உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
அதனையடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் சற்று வலுவடைந்து தாழமுக்கமாக (DEPRESSION) மாறி மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து அதனை அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கை இந்திய கரையோரம் நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.