இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக போலி தகவல்களை பகிர்ந்து, பொதுமக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வோரை கண்டறிவதற்கான பொறுப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணிணி விசாரணை பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த விசாரணைகளுக்காக விசேட விசாரணை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களின் ஊடாக போலி தகவல்கள் பகிரப்படுவதினால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதனால், கொவிட் தடுப்புக்கான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அதனால், இவ்வாறான செய்திகளை வடிவமைத்து, சமூக வலைத்தளங்களின் பகிரும் நபர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
ஒருவர், போலி செய்திகளை பகிர்வதன் ஊடாக, மக்களை பதற்றமான நிலைக்கு கொண்டு செல்வாராயின், அது அவருக்கு எதிராக பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது சரத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
Discussion about this post