பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், டிக்டொக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
பாகிஸ்தானிற்குள் அனைத்து சமூக வலைத்தளங்களும் சில மணிநேரத்திற்கு தடை செய்ய பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் மாலை 4 மணி வரை சமூக வலைத்தளங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட மதக் கட்சிகளினால் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள வன்முறைகளை தவிர்த்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நோக்குடனேயே இந்த சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கிய வந்த தெஹ்ரீக் – இ – லாபாய்க் பாகிஸ்தான் அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் பிரகாரமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, பாகிஸ்தானில் தொடர்ச்சியாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுடன், இந்த வன்முறைகளினால் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 300ற்கும் அதிகமான பொலிஸார் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே, வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
Discussion about this post