கொழும்பு மாநகர பகுதியின் வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி சுகாதார பிரிவில் நாளாந்தம் நடத்தப்படும் கொவிட் பரிசோதனைகளில் சுமார் 30 தொடக்கம் 40 வீதமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.
தமிழ் FM அறிவிப்பாளர் RJ சக்சியுடன் இடம்பெற்ற சிறப்பு நேரடி கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நாளொன்றில் 100 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டால், அதில் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
வெள்ளவத்தை சுகாதார பிரிவிற்குட்பட்ட பெரகும்பா தொடர்மாடி பிரதேசத்தின் பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் சுமார் 100ற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதையடுத்து, பெரகும்பா பிரதேசத்தை இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை – பெரகும்பா பகுதியில் மாத்திரமே கொத்தணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதைதவிர, வெள்ளவத்தை பகுதியில் வேறு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான கொத்தணி உருவாகவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
Discussion about this post