எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், சதொச விற்பனை நிலையங்களின் ஊடாகவே விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 150 முதல் 165 ரூபாவாக விற்பனை செய்யப்படும் சிவப்பு சீனியின் விலையை 115 ரூபா வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வணிக கூட்டுதாபனத்தினால் தயாரிக்கப்படும் 100 கிராம் தேயிலை, தற்போது சந்தையில் 135 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், அந்த தேயிலையை எதிர்வரும் வாரம் முதல் 95 ரூபாவிற்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் சோயா எண்ணெயை, 310 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கை கழுவும் திரவம் 100 மில்லி லீற்றரை, 250 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, 50 மில்லிலீற்றர் கை கழுவும் திரவத்தை, 150 ரூபா வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எல்.எஸ் சான்றிதழை பெற்ற முகக்கவசத்தை 14 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அபியாச கொப்பிகளின் விலைகளை, தற்போது காணப்படுகின்ற விலைகளில், 20 வீதத்தால் குறைக்கவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
விலை குறைக்கப்பட்ட பொருட்களை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post