எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்தன்று, 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்;ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
இரண்டு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தியே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
தமது போராட்டத்திற்கு 84 நாட்கள் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின், ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபர்கள் போராட்டத்தில்
எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச ஆசிரியர் தினத்தன்று, அதிபர்களும் போராட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடியை ஏற்றி, தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் சுமார் 11,200 அதிபர்கள் உள்ளதாகவும், அனைத்து அதிபர்களும் தமது போராட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)