நாராஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையின் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையத்திற்கு முன்பாக இன்று (25) முற்பகல் அமைதியின்மை நிலவியுள்ளது.
மொடோர்னா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்த பல்கலைக்கழக மாணவர்களே, இவ்வாறு அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தடுப்பூசி, இராணுவ வைத்தியசாலையில் செலுத்தப்படாது என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்ததை அடுத்தே, அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள், இராணுவ வைத்தியசாலையில் இன்று முற்பகல் வருகைத் தந்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின் கடித உரையின் கீழ், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, தாம் வருகைத் தந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவ வைத்தியசாலையில் இன்று மற்றும் நாளைய தினங்களில் மொடோர்னா தடுப்பூசி பிற்பகல் 4 மணி வரை செலுத்தப்படுவதாக, பல்கலைக்கழக கடித உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவ அடையாளஅட்டையை சமர்ப்பிப்பதன் ஊடாக, மொடோர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக உப வேந்தரின் பெயரில் இந்த கடித உரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இராணுவ வைத்தியசாலையில் நேற்றைய தினம் மொடோர்னா தடுப்பூசி எந்த அடிப்படையில் செலுத்தப்பட்டது என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விமான கடவுச்சீட்டு கைவசம் வைத்திருந்த மாணவர்களுக்கு நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)