இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் சுமார் 45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உக்கிரமடைந்துள்ள கொரோனா நிலைமைக்கு மத்தியில், அதனை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளும் விதம் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியினால் தயாரிக்கப்பட்ட யோசனைகளை, நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டதுடன், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று (17) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் நிலைமை குறித்து, ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (16) தொலைபேசியூடான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலை அடுத்தே, இருவரும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தையின் மரண வீட்டிற்கு இன்று காலை சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post