பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துநர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, இவ்வாறு பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
5 லட்சம் ரூபா சரீர பிணையின் கீழ், சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன், சந்தேகநபரின் கடவூச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணத்தை அடுத்து, ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், 2016ம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று தொடர்பில் அன்றைய தினமே, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post