ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்ட 69 பேரை நீக்குவதற்கான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை, தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் உறுப்பினர்களுக்கு பதிலாக, புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற தமது கட்சி எடுத்த தீர்மானத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காது நிராகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு சட்டத்தில் கூட இடமில்லை என்பது, இந்த தீர்ப்பின் ஊடாக உறுதியாகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post