இலங்கை : பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பிலான மாற்று யோசனைகளை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.
தொழில் அமைச்சின் ஊடக செயலாளரினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 ரூபா சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று (07) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் இரண்டு தரப்பிற்கும் நியாயமான தீர்மானமொன்றை எட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும், அதனை அவர்கள் தவறவிட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நிறைவேற்றுவதற்காக, மாற்று திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகின்றார்.
அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக 1000 ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post