சிலாபம் – பல்லம – நாகவில பகுதியில் சந்தேகநபர் ஒருவரினால் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கை வெட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பல்லம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலக பண்டார ஹேரத், சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கையை வெட்டி, தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குறித்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் – ஆணமடு நீதிமன்றத்தில் நடத்தப்படும் மற்றுமொரு வழக்கொன்றிற்கு குறித்த இளைஞன் முன்னிலையாகாதமையினால், நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இளைஞனை கைது செய்ய சென்ற வேளையிலேயே அவர், பொலிஸ் அதிகாரியின் கையை வெட்டியுள்ளார்.
இதையடுத்து, ஏனைய பொலிஸ் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.