விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று சாட்சியமளிக்க முன்வந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், தமிழ் மொழியில் சாட்சியளிக்க வேண்டும் என கோருவதாக அவரது சட்டத்தரணி, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஆரம்பித்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், ரிஷாட் பதியூதீன், சிங்கள மொழியிலேயே விசாரணை குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும், ரிஷாட் பதியூதீன் சிங்கள மொழியிலேயே சாட்சி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் மொழி பெயர்ப்பாளர் சுகயீனம் காரணமாக இன்று ஆணைக்குழுவிற்க சமூகமளிக்காமையினால், ஆங்கிலம் அல்லது சிங்கள மொழியில் சாட்சி வழங்குமாறு ஆணைக்குழு ரிஷாட் பதியூதீனிடம் கூறியுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம், சில தமிழ் வசனங்களை பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எனினும், தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சி வழங்குவதற்கு தனக்கு ஜனநாயக உரிமை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியில் சாட்சி வழங்கும் போது சில விடயங்களை தெளிவூட்ட சிரமம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மாலை வேளையில் தமிழ் மொழியில் சாட்சி வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.