இலங்கை தமிழர்களின் உண்மை நிலைமைகளை அறியாமலேயே, இலங்கை தமிழர்களின் பிரச்சினை குறித்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு உரிமை மாத்திரம் பிரச்சினை கிடையாது.
அடிப்படை வசதிகள் கூட பிரச்சினையாகவே காணப்படுகின்றது என்றால், நம்ப முடியுமா?
அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வரும் சமூகமாகவே இலங்கை தமிழர்கள் இருந்து வருகின்றமைக்கு இந்த செய்தி சிறந்ததொரு உதாரணமாக இருக்கும் என நம்புகின்றோம்.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள், இன்றும் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றியே தமது வாழ்க்கை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர்.
இது கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை – கித்துல்கல பகுதி.
இந்த பகுதியில் வாழும் லக்ஷ்மி என்ற முதாட்டி தொடர்பிலேயே ட்ரூ சிலோன் இன்று ஆராய்கின்றது.
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிப் புரிந்த காலப் பகுதியில் கட்டப்பட்ட சுமார் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த வீட்டிலேயே இந்த முதாட்டி வாழ்ந்து வருகின்றார்.
இந்த குடியிருப்பு இடிந்து வீழும் அபாயத்தில் உள்ள போதிலும், வேறு எந்தவித மாற்று வழிகளும் இல்லாமையினால், அவர் இதே வீட்டில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
எத்தனையோ அரசியல்வாதிகள் வாக்கு திரட்டுவதற்காக சென்ற போதிலும், அவர்களின் கண்களுக்கு இந்த லக்ஷ்மி பாட்டி தெரியவில்லை.
தனது கணவர், பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் இந்த முதாட்டிக்கு, யார் உதவுவது?