மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 700 சொகுசு ரக வாகனங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு, புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புடன் இரகசியமாக நடத்திய விசாரணைகளின் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை ஜீப் வண்டிகள் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த 5 முதல் 6 வருடங்களில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி முதல் கீழ் மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த காலப் பகுதியில் அதிகளவில் ப்ராடோ, டிபேன்டர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் முறையற்ற விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதன்படி, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திணைக்களத்தில் சேவையை பெற்றுக்கொள்ள வருகைத் தருவோர், வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி முன்பே திகதிகளை ஒதுக்கிக் கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)