பதுளை − சரஸ்வதி கனிஷ்ட பாடசாலைக்கு முதல் நாள் சென்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையின் முதலாம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமான நிலையில், தனது பாட்டியுடன் குறித்த சிறுவன் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
பசறை பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து இறங்கி, வீதியை இருவரும் கடந்துள்ளதாக பதுளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு, ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தது.
இதன்போது, பதுளை நகரிலுள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில், எரிப்பொருளை நிரப்பிய லொறியை, அதன் சாரதி வீதியை நோக்கி செலுத்தியுள்ளார்.
இதன்போதே, சிறுவனும், சிறுவனின் பாட்டியும் லொறி சக்கரத்தில் சிக்குண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சிறுவனின் பாட்டிக்கு, தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தின் பதுளை − அசேலபுர பகுதியைச் சேர்ந்த 6 வயதான சிவநேசன் வருண் ப்ரஜிஷ் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
லொறி அதிக உயரமாக காணப்பட்டமையினால், விபத்துக்குள்ளான இருவரும் லொறியை அண்மித்து கடந்தது, லொறியின் சாரதிக்கு தென்படாமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post